Thursday, March 21, 2013

முகவீதி - கவிதைப் புத்தகத்தின் முன்னுரை

தமிழின் மூத்த கவிஞர் திரு ராஜாசுந்தரராஜனின் முகவீதி புத்தகத்திற்கு திரு. சுந்தரராமசாமி எழுதிய முன்னுரை

---------------------------------------------------------------------------------

இந்த மண்ணில் ஒரு இளங்கவி

சுந்தர ராமசாமி

சமீப காலத்தில் தமிழில் தோன்றியுள்ள ஒரு இளங்கவி ராஜ சுந்தரராஜன். அபூர்வமாகவே இவரது கவிதைகள் சிறு பத்திரிக்கைகளில்கூடப் பிரசுரமாகி இருக்கின்றன.  தரமான கவிதைகளைத் தேடும் மனங்கள் நமக்கு இருக்ககூடும் எனில் அவற்றின் சூட்சும அவதானிப்புக்கு இக்கவிதைகள் இலக்காயிற்றா என்பதும் சந்தேகம்தான். கவிதை எனும் பெயரில் துணுக்குகளின் உற்பத்தி உச்சகட்டத்தில் இருக்கும் காலம். கழிவுப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் தரமானவை புதையுண்டு போகும் காலம். பதரிலிருந்து மணிகளைப் பிரிக்கும் விமர்சனமும் இங்கு நோயுற்றுக் கிடக்கிறது. ஒன்றில் அவை சுய லாபங்களைச் சார்ந்த தந்திரங்கள். தன்னைப் பிறர் தூக்க அச்சாரமாக தான் பிறரைத் தூக்கிக்கொண்டிருப்பது. அல்லது தனி நபர் குரோதங்களின் கத்தல்கள்; அல்லது பழைய தகவல்களை மென்று கொண்டிருக்கும் பத்திரிக்கைத் தொழில். இவற்றைத் தாண்டி வருபவை மிகச் சொற்பம்; புதிய பயிர்கள் முளை விடுகின்றன.  பாறைகளின் இருக்கில் முளைக்கும் செடிகள் போல் தலை தூக்குகின்றன. இவை மரங்களாகி இவற்றின் வேர்கள் பாறைகளை உடைக்க வேண்டும். விமர்சனம் தோற்கும் களத்தில் படைப்பு முன்னேறிச் செல்லவேண்டும்.

புதுக் கவிதையின் வேகமான எழுச்சிக்குப்பின் இப்போது கால் நூற்றாண்டு ஒடி விட்டது. இதுகாறும் வெளிப்பட்டுள்ள முக்கியமான கவிதைக் குரல்களை இப்போது பரிசீலனை செய்து பார்ப்பது நம் பார்வையைச் செம்மைபடுத்திக்கொள்ள உதவும். முற்றிலும் நம் அனுபவங்களை சார்ந்த, இயற்கையான, ஆரோக்கியமான கவித்துவங்கள் வழியாகவே நாம் உன்னதங்களை அடையமுடியும்.

அனுபவங்களைக் குலைக்கும் படிப்பின் பாரங்களை இறக்கி, நம் வாழ்வை சார்ந்த கவிதைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  மிகத் தொலைவில் இருப்பவற்றைப் பிடித்துப் போடுவதில் படிமம் தேடும் கவி மணங்கள், தம் விரல் நுனிகளால் ஸ்பரிசிக்கக்கூடிய எளிமையான், ஜீவாதாரமான பேரனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நூற்றாண்டுக்குரிய துக்கங்கள் அனைத்தும் மேறகத்திய வாழ்வை மிகக் கடுமையாகப் பாதித்துச் சீர்குலைத்து இருக்கின்றன. இந்த வாழ்வு அளித்த வடுக்க்களைப் பெற்றுக்கொண்ட கவித்துவ ஆளுமைகள் அங்கு மிகச் சிக்கலாக வெளிப்பட்டுள்ளன. இங்கோ வாழ்க்கை மற்றொரு தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாழ்வுக்குரிய கஷ்டங்களுடனும், பிரச்சினைகளுடனும், சில நிம்மதிகளுடனும். இங்கும் இழை பிரிகின்றன மனித உறவுகள். ஆனால், இன்னும் முற்றாக அவை கருகிப் போய்விடவில்லை. மேற்கத்திய கவிதை முயற்சிகளைப் படிப்பு மூலம் அறிந்துகொண்ட கவிஞர்கள், இங்கு சுய அனுபவங்களைப் பின் தள்ளி, நவீன மோஸ்தர்களின் பிரமைகளுக்கு ஆட்பட்டு, தம் கவிதைகளையும் சிக்கலாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த சிக்கலை நம் வாழ்க்கை அனுபவங்கள் நியாயப்படுத்துவதாகத் தெரியவில்லை. நம் வாழ்வுக்கு உரித்தான அனுபவங்கள் ராஜசுந்தரராஜனிடம் கவிதையாக மிளிரும் பாங்குதான் இவரைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை நமக்கு வற்புறுத்துகிறது.  நம்மால் இவரது கவித்துவ அனுபவங்களை நினைவுகூர்ந்து இனங்கண்டு கொள்ள முடியும். நம் அருகில் வெகு ஸ்தூலமாக இவரது இருப்பை உணரவும் முடியும். இங்கு அனுபவஙகள் அவற்றை எழுப்பிய தளத்தின் புத்துணர்ச்சியோடு வெளிப்படுகின்றன. நேராக, இயற்கையாக, எளிமையாக  அனுபங்களை வலுக்கட்டாயமாக் மற்றொரு தளத்திற்குத் தூக்கிச் சென்று தத்துவ முலாம் பூசுவதிலோ ‘கவித்துவத்தை’ ஏற்றுவதிலோ, இல்லாத சமூக ஆங்காரம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதிலோ, இவர் முற்றாக நம்பிக்கை அற்றவர் என்பதை இவரது ஒவ்வொரு கவிதையும் காட்டுகிறது.
ராஜ சுந்தரராஜன் கவிதைகள் அவற்றிற்கே உரித்தான குரலைக் கொண்டிருக்கின்றன. படிப்பு, புலமை ஆகியவற்றின் உபாதைகள் இன்றி, அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம். பொதுப் புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாதயத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரக்கியமாகவும் இருக்கிறது.  புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என்பதால் அவற்றின் சலனங்களும் இவரைப் பாதிக்கின்றன. ஜீவன்களின் பரிதவிப்பு, இயற்கையின் கோலங்கள், தனிமை, வாழ்கைப் புதிர்கள், பருவ மாற்றங்கள், மனித மனோபாவங்கள், இயலாமைகள், இயற்கை எனும் ஆச்சாரியம் எல்லாம் இவரைப் பாதிக்கின்றன. ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் விலகி நிற்கும் மனம் இவருடையது. விவரணங்களில் நுட்பம் கொண்ட, நுட்பங்களில் கவனம் பதியும் சாட்சி. மிகை, மேல் ஸ்தாயி இவற்றில் நம்பிக்கை இல்லாத சாட்சி. ஆனால் அனுபங்களைப் பதிவு செய்யும் பாங்கிலும், அவற்றின் வெளிப்பாட்டு நுட்பத்திலும், துல்லியத்திலும், சிக்கனத்திலும், செய்யுள் பதிவுகளாக இவரது வரிகள் முடிய மறுத்து, வாழ்வின் அடிப்படையை ஏதோ ஒரு விதத்தில் ஸ்பரிசித்துவிடும் அதிர்வுகள் தந்து, கவிதைகளாக ரூபம் கொள்கின்றன.  மொழி, புத்தகத்திலிருந்து மனிதன் நாவிலும்; குரல், மேடைக் கும்பலிலிருந்து தனி மனிதனின் ஆத்மாவுக்குள்ளும் உறைய விரைவதை உணர முடியும். சங்க காலக் கவிதையின் பொதுத் தன்மை மீண்டும் இப்போது இங்கு தோன்றி, இக்காலங்களுக்குரிய பாதிப்புகளையும் பெற்றுக்கொண்டு, தம் தொழிலைத் தொடர்வதுபோல் இருக்கின்றன இவரது கவிதைகள்.

வறட்சி

வானுக்கு இல்லை இரக்கம். பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு.
காற்றுக்கு விடை சொல்லித்
துக்கித்து இருக்கிறது வீதி.
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய் வறண்டு
சுருண்டு விட்டன
தாகித்து அணுகுகிற வாளிக்கு,
என்ன சொல்வது பதில் ?
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை.

சுந்தரராஜனின் சாட்சித்தன்மையும், உணர்ச்சி வடிந்த குரலும் மொண்ணத் தனத்தை சார்ந்தவை அல்ல. அதற்கு நேர்மாறாக வீணையின் கம்பிபோல் வலுவும் ரீங்காரமும் கொண்டவை. ஒரு நுட்பமான வாசக இதயமே இவரது கவலைகளையும் பகிர்ந்துகொள்ளமுடியும்.  வாழ்வின் மையத்தில் மனிதனை வைத்துப் பார்க்கும் ஒரு பார்வை. காரியங்களின் விளைவுகளை மனித நலன்களில் உரைத்துப் பார்க்கும் பார்வை. இவை பல கவலைகளும் சில ஆசுவாசங்களும் கொள்கின்றன. மனித உறவுகளுக்குக் குறுக்கே நிற்கும் வில்லங்கங்களால் கவி மனம் வருந்துவதை உணரலாம். வாழ்கையின் கோலங்களையும் மாற்றங்களையும் ஒரு எல்லை வரையிலும் இயற்கையாகக் காண விவேகம் கொண்ட இந்த மனங்கூட வாழ்வின் தளத்தில் வருத்தங்கள் கொள்ள நேருகிறது.  ஆனால் வருத்தங்களால் மனம் சுருங்கிப்போக மறுத்து, தன்னை புற உலகத்தோடு பிணைத்துக்கொண்டு அடிப்படையான தீர்வுகளுக்கு ஏங்குகிறது.  இத்தனைக்கும் வாழ்வு சார்ந்த பெரிய கனவொன்றும் கவிக்கு இல்லை. துணை, வீடு, நிம்மதி, பிறருடன் கூடிக் கலந்து வாழ்தல், இயற்கையின் அழகுகளோடும் ஆசுவாசங்களோடுமான உறவுகள், உறவுகளில் முட்களற்ற வாழ்க்கை. இவ்வளவுதாம்.

சிறு சிறு பகுதிகளாக தன் அனுபங்களைப் பதிவு செய்து பார்வையின் ரேகைகளை உணர்ந்த மனம், தம் பார்வையை தொகுத்துப் பார்க்க முயன்ற முயற்சி ‘உயிர் மீட்சி’ என்ற கவிதை எனலாம். இந்த பார்வைத் தொகுப்பு முக்கியமானது; பரஸ்பரம் மனம் விட்டுப் பேசிக்கொண்ட நிம்மதியைக் கவிக்கும் வாசகனுக்கும் தரக்கூடியது. இங்கு வாழ்க்கையின் கோலம், கனவு, ஆசுவாசம் மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. அன்பும், பரஸ்பரம் புரிந்து கொள்ளும் ஆற்றலும், மனிதராசி நிறைவாகக் கொள்ளுமெனில் வாழ்க்கை இன்னும் எவ்வளவோ செம்மைப்பட முடியும். ஆனால் கரைய மறுக்கிறது. அன்பின் தளம் இறங்கி விட்ட வாழ்வைக் கற்பனை செய்து பார்க்கும் இவரது வரிகள் மனதை, கோணல் மனதை, கரைக்கின்றன. மிகவும் சுலப சாத்தியமான ஒன்று, மிகவும் சிரம சாத்தியமாகி விட்டதை எண்ணி நம மனம் வியாகூலம் கொள்கிறது.

உலகின் முதல் கவிக்குரல்கள், மனித அனுபவத்தை உண்மையாக பதித்த கவிக்குரல்கள், அன்பின் நெகிழ்ச்சியைப் போற்றின. இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் இன்றும், ஒரு இளங்கவி, தம் அனுபவங்களைச் சார்ந்து, அதே விடையைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இப்படி இருக்கிறது நம் வாழ்க்கை.

நாகர் கோவில்,
7, ஜனவரி, 1986.
Share: